ட்ரைடென்ட் கெம்பார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய நீண்டகால நிலக்கரி விநியோக ஒப்பந்தம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரியவருகிறது.
குறித்த நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட மூன்றாவது கப்பல் தொகுதியின் நிலக்கரி, லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
இது குறித்து மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால கருத்துத் தெரிவிக்கையில், லங்கா நிலக்கரி நிறுவனம் வழங்கிய முதற்கட்டத் தரப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அவசர நிலக்கரி கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய உடனடித் தேவை தற்போது எழவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது கப்பல் தொகுதியின் உத்தியோகபூர்வ தர அறிக்கை விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக வரவுள்ள நான்கு மற்றும் ஐந்தாவது கப்பல் தொகுதிகளும் தரமானதாகவே அமையும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான சூழலில், விநியோகஸ்தருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஆறாவது கப்பல் தொகுதியிலுள்ள நிலக்கரியை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீண்டகால ஒப்பந்தத்தில் ஏதேனும் தரக் குறைபாடுகள் உறுதிப்படுத்தப்பட்டு விநியோகம் நிறுத்தப்படும் பட்சத்தில், மின்சார உற்பத்தியைப் பாதிக்காமல் இருக்க 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
எனினும், தற்போதைய நிலவரப்படி அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் மட்டுமே அந்த மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
ட்ரைடென்ட் கெம்பார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தமானது, 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் 1.5 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இதுவரை வந்தடைந்த ஆறு கப்பல் தொகுதிகளில், முதலாவது தொகுதியின் சாம்பல் உள்ளடக்கம் 22.42 சதவீதமாகவும், இரண்டாவது தொகுதியில் 16.67 சதவீதமாகவும் காணப்பட்டது.
ஒப்பந்த விதிகளின்படி, சாம்பல் உள்ளடக்கம் 16 சதவீதத்தை விடவும், ஈரப்பதம் 16 சதவீதத்தை விடவும் அதிகரிக்கும் பட்சத்தில் அல்லது வெப்பப் பெறுமதி; குறையும் பட்சத்தில் அந்த நிலக்கரி நிராகரிக்கப்பட வேண்டும்.
இரண்டு தனித்தனி கப்பல் தொகுதிகள் இவ்வாறான தரக் குறைபாடுகளைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய நிலக்கரி ஒப்பந்தம் தொடர்கின்றது- எதிர்கட்சிகள் கையாலாகாத நிலையில்
What’s your Reaction?
