அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை மறுதினம் முதல் மேலும் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 26ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர அவகாசம் வழங்கியிருந்தது.
எனினும், அந்த காலக்கெடு முடிந்த பின்னரும் உரிய மற்றும் திருப்திகரமான தீர்வுகள் வழங்கப்படாததால், போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதன்படி, பெப்ரவரி 02ஆம் திகதி காலை 8.00 மணி முதல் அமலுக்கு வரும் நடவடிக்கைகள் பின்வருமாறு:
வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளிகளுக்கு பரிந்துரைத்து மருந்துச் சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.
வைத்தியசாலைகளில் மேற்கொள்ள இயலாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியக ஆய்வகங்களில் மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பதும் இடைநிறுத்தப்படும்.
அரசியல் அமைப்புகள் அல்லது குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் கிளினிக்குகளில் வைத்தியர்கள் தன்னார்வமாக பங்கேற்பது தவிர்க்கப்படும்.
போதிய வைத்தியர்கள் இல்லாத சூழலில், புதிதாகத் திறக்கப்படும் விடுதிகள் அல்லது பிரிவுகளுக்கு வைத்தியர்களை இணைப்பது நிறுத்தப்படும்.
நோயாளிகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் போதுமான பணியாளர் வசதிகள் இல்லாத சூழலில் நோயாளிகளைப் பரிசோதிப்பதில் இருந்து வைத்தியர்கள் விலகுவார்கள்.
விசேட வைத்திய நிபுணர்கள் தாம் நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் மட்டுமே சேவையாற்றுவார்கள்; விசேட நிபுணர்கள் இல்லாத பிற வைத்தியசாலைகளில் மேலதிக கடமைகளை மேற்கொள்வது நிறுத்தப்படும்.
இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
