மன்னார் விடத்தல்தீவு இயற்கை காப்பகத்தின் எல்லைகளை மாற்றி நீர்வாழ் வளர்ப்பு திட்டத்திற்கு வழிவகுத்திருந்த முன்னய அரசாங்கத்தின் அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அரச சட்டத்தரணி உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, 2024 மே 6ஆம் திகதி வெளியிடப்பட்ட, விடத்தல்தீவு இயற்கை காப்பகத்தின் எல்லைகளை மாற்றிய வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யும் புதிய விசேட வர்த்தமானி, கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த முன்னைய வர்த்தமானி அறிவித்தலை, வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பதவியில் இருந்த காலத்தில் வெளியிடப்பட்டது.
இந்த வர்த்தமானி ரத்து செய்யப்பட்டதையடுத்து, தங்களது முக்கிய கோரிக்கை நிறைவேறியதாகக் கூறி, மனுதாரர்கள் தாக்கல் செய்த வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகள், இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சட்டப்படி பாதுகாக்கப்பட்ட இயற்கை காப்பகத்தின் எல்லைகளை மாற்றியது சட்டவிரோதம் என அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
விடத்தல்தீவு இயற்கை காப்பகம் இலங்கையின் முக்கியமான கடற்கரை மற்றும் கடல் உயிரியல் பாதுகாப்பு பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
