நாட்டில் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முந்தைய கேள்வி கோரல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலக்கத் தகடுகளை அச்சிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, தற்போது சுமார் 4 இலட்சம் இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் அச்சிடப்படவுள்ள புதிய இலக்கத் தகடுகள் சர்வதேச தரத்திற்கு அமையத் தயாரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த காலங்களில் அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால், வாகன உரிமையாளர்கள் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
