முக்கிய செய்திகள்

வற்வரியை நிறுத்த வேண்டும் மீன் பிடியை ஊக்குவிக்க வேண்டும்- இலங்கை ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கம்

வற்வரியை நீக்குமாறும் நாட்டில் மீன் பிடியை ஊக்குவிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் வற்வரியை அரசாங்கம் நீக்குமாக இருந்தால், அதனால் கிடைக்கும் பயனை நுகர்வோருக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் அதனை அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ, செயலாளர் கலாநிதி கபில பாலசூரிய, உறுப்பினர்களான நதீக்க டி சில்வா மற்றும் தேசப்பிரிய பண்டிதரத்ன ஆகியோர் இணைந்து கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

இங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் வற்வரியை நீக்க வேண்டுமென நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன் நாட்டில் மீன் பிடியை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.

வற்வரியை அரசாங்கம் நீக்கும் பட்சத்தில் அதனால் கிடைக்கும் பயனை நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
வற்வரியை நீக்கும் பட்சத்தில் தற்போது ரின்மீன் விற்பனை செய்யப்படும் விலையில் இருந்து 50 ரூபா முதல் 80 ரூபா வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் அண்மைக்காலமாக ரீன் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எமது நாடு கடல்வளம் நிறைந்த நாடு, இங்கு மீன்வளம் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் நாம் வெளிநாடுகளில் இருந்து ரின்மீன்களை இறக்குமதி செய்கின்றோம்.

இதனால் எமது நாட்டில் பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
தொழில்வாய்ப்புக்கள் அற்றுப்போகின்றன. இயற்கையான மீனில் இருந்து கிடைக்கக் கூடிய புரத உணவை எம்நாட்டு பாமரமக்கள் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

தற்போது நாட்டின் மேற்கு கடல்பகுதியிலேயே மீன்பிடி பெரும்பான்மையாக இடம்பெறுகின்றது. ஆனால் கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடி மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. கிழக்குப் பகுதியில் மீன்பிடியை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள போதும் அதனை பயன்படுத்தாமல் விடப்பட்டுள்ளது. அதனை மீனவர்கள் பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்தரை இலட்சம் ரின்மீன்கள் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் ரின்மீன்களே நுகர்வுக்கு தேவையாக காணப்படுகின்றது. எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரின்மீன்களை டுபாய், கொரியா போன்ற நாடுகளுக்கு எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்ய முடியும்.

எமது நாட்டில் மீன்பிடியை ஊக்குவிக்கும் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் எதிர்காலத்தில் குறைவடையும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

தற்போது நாட்டில் 21 ரின்மீன் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. மீன்பிடியை ஊக்குவிக்கும் பட்சத்தில் பல நிறுவனங்களை உருவாக்கி, பாரியளவிலான ரின்மீன் தொழிற்துறையை ஏற்படுத்த முடியும். இதனால் பலருக்கு வேலைவாய்ப்புக்கள், அந்நிய செலாவணி கிடைப்பதுடன் பல நன்மைகளும் கிடைக்கும்.

சீனாவில் இருந்து ரின்மீன் வகைகள் இறக்குமதி செய்யப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கூறப்பட்டாலும் தற்போதும் சீன தயாரிப்பு ரின்மீன்கள் சந்தைகளில் காணப்படுகின்றன எனத் தெரிவித்தனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp