முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், டிட்வா புயலை எதிர்கொள்ள அரசாங்கம் போதிய தயார்நிலையில் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன், அதனை ஆய்வு செய்ய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்வைத்தது.
இந்த தீர்மானம், எதிர்க்கட்சியின் தலைமைச் செயலாளர் கயந்த கருணாதிலக்கவால் முன்வைக்கப்பட்டதுடன், அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வேடாரச்சி அதனை ஆதரித்தார்.
டிட்வா புயல் இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவாகக் கருதப்படும் நிலையில், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் இதுவரை முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, புயலை எதிர்கொள்ள அரசு எந்த அளவு தயாராக இருந்தது, அந்தத் தயார்நிலை ஏன் தோல்வியடைந்தது என்பவற்றை விரிவாக ஆய்வு செய்ய தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற தேசிய பேரழிவுகள் தொடர்பிலும் முன்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டதை நினைவூட்டிய எதிர்க்கட்சி, டிட்வா புயலும் அதே அளவிலான தனித்துவமான பேரழிவு என சுட்டிக்காட்டியுள்ளது.
வானிலை ஆய்வு திணைக்களமும் வெளிநாட்டு ஊடகங்களும் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கியிருந்த போதும், உரிய தயார்ப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சேதங்களை பெருமளவு தவிர்க்க முடிந்திருக்குமேனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை சபாநாயகர் நியமிப்பதுடன், குழுவில் அதிகபட்சம் 12 உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேவையான நபர்களை அழைத்து விசாரிப்பதற்கும், ஆவணங்களைப் பெறுவதற்கும், நிபுணர்களின் சேவையைப் பெறுவதற்கும், இடைக்கால அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்கும் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழு தனது முதல் கூட்டத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில் சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
