முக்கிய செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட திட்டங்கள் அவசியமென்கிறார் சத்தியலிங்கம் எம்பி

வடக்கு மாகாணத்தில் நீண்ட கால யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மூன்று மக்கள் குழுக்கள் உள்ளன.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
அவர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இவர்கள் எமது சமூகத்தில் மூன்றில் ஒரு பகுதியினராக உள்ளனர்.

இவர்களை முன்னேற்ற வேண்டும். எமது மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கே விசேட திட்டங்களை கொண்டு வர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2022ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது.
அரசியல் ரீதியிலான காரணமாக நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தம் மற்றும் நாட்டின் முறையற்ற நிதி முகாமைத்துவம், ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் ஆகியன பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணியாக அமைந்தன. .

இதனால் மக்கள் சமூக பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் பாரிய அரசியல் மாற்றத்தை செய்து இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியில் 4.2 வீத பங்களிப்பை வடக்கு மாகாணம் வழங்குவதுடன் மேல் மாகாணம் 43.4 வித பங்களிப்பை வழங்குகின்றது.

அதன்படி பொருளாதார திட்டங்கள் மாகாணங்களுக்கு இடையே மாறுபட்டதாகவே உள்ளது.

வடக்கு மாகாணத்தில் எந்த தொழில் துறையை எடுத்துக்கொண்டாலும் அந்த மாகாணம் கீழ் நிலையில் இருக்கின்றது.

பொருளாதார விடயத்தில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்.
எமது மாகாணங்களில் மக்களின் அரசியல் உரிமையை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.

எமது நீண்ட கால உள்நாட்டு பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால் பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதுடன், நாம் எதிர்பார்க்கும் பொருளாதார அந்தஸ்தை இந்த நாடு அடைய முடியாத சூழல் ஏற்படும்.

எமது மாகாணத்தில் உற்பத்தி பொருளாதாரத்தில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். ஆனால் இங்கே விவசாயிகள் பெரும் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

மக்கள் உற்பத்திகளை மேம்படுத்த காணிகள் அற்றவர்களாக இருக்கின்றனர்.
மக்களின் காணிகள் இராணுவம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளன.

அவற்றை விடுவிக்க வேண்டும். வன்னியில் பெருந்தொகையான குளங்கள், தனியார் வயல்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகள் இல்லாமல் இருக்கின்றன.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்வு தொடர்பில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து தாழ்வாக இருப்பதால் அங்கு மணல் அகழ்வால் மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படும்.
இதனால் மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் உற்பத்திசார் பொருளாதாரம் தொடர்பில் பேசுவதாக இருந்தால் இவ்வாறான அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

எமது மாகாணத்தில் நீண்ட கால யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட 3 மக்கள் குழுக்கள் உள்ளன.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

அவர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இவர்கள் எமது சமூகத்தில் மூன்றில் ஒரு பகுதியினராக உள்ளனர்.

இவர்களை முன்னேற்ற வேண்டும். எமது மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே விசேட திட்டங்களை கொண்டு வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp