இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் 23,000 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்ற உத்தியோகப்பூர்வ அறிவிப்பு துல்லியமற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 40,000-க்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், வழங்கப்பட்டிருக்கும் அனுமதிகள் சுமார் 6,000 ஆசிரியர்களை மட்டும் ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய அளவிலேயே உள்ளன என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கம் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, ஆசிரியர் நெருக்கடியை தீர்க்கக்கூடிய நடைமுறை திட்டம் அரசிடம் இல்லை என்று கூறினார்.
‘அதிகாரிகள் இந்த ஆண்டு 23,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
ஆனால் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அனுமதிகளை ஆய்வு செய்தால், அதிகபட்சம் சுமார் 6,000 பேரையே ஆட்சேர்ப்பு செய்ய முடியும்,’ என்று அவர் தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு அனுமதிகளை சங்கம் பரிசீலித்ததாகவும், ஒவ்வொரு மாகாண சபைக்கும் சுமார் 600 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுமார் 400 பேர் வீதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகவல்களை கூட்டிப் பார்த்தால் மொத்தம் சுமார் 6,000 பேரே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என அவர் கூறினார்.
மேலும், ஆண்டுதோறும் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் புதிய நியமனங்கள் ஈடு செய்ய முடியாது என பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
ஆண்டுக்கு சராசரியாக 7,000 முதல் 8,000 ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்; எனவும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் இதே அளவிலானோர் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘
இந்த ஆண்டு நியமிக்கப்படவிருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால், ஆசிரியர் பற்றாக்குறை எப்படி தீரும்?’ என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌh முன்பே தெரிவித்ததாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான பெரிய அளவிலான ஆட்சேர்ப்பு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மேற்கொள்ள முடியவில்லை.
அதனால் ஆசிரியர் ஆட்சேர்ப்பு மாகாண சபை மட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாகாண சபையும் தங்களது நடைமுறைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேவையான தீர்மானங்களை எடுக்கின்றன என்றும், மாகாண மட்ட ஆட்சேர்ப்புகள் ஆசிரியர் பற்றாக்குறையை குறைக்க உதவும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
