பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட செயலாளர் நாயகமும் தலைமை அதிகாரியுமான சட்டத்தரணி சாமிந்த குலரத்தின இடையே குற்றச்சாட்டுகள் பரிமாறப்படும் நிலையில், நிர்வாக ரீதியான கடுமையான சர்ச்சை நிலவுவதாக தெரியவருகின்றது.
அரசின் வளங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், தனிப்பட்ட விரோதம் காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சாமிந்த குலரத்தின சபாநாயகருக்கு எதிராக லஞ்சம், மற்றுமு; ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்ததிலிருந்து 24 மணி நேரத்துக்குப் பின்னர், சபாநாயகர் அலுவலகத்திலிருந்து பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு 15 அம்சங்களை கொண்ட கடிதம் அனுப்பப்பட்டு ‘சான்றளிக்கப்பட்ட தகவல்கள்’ கோரப்பட்டுள்ளன.
இதில் சபாநாயகருக்கான வாகனங்கள், எரிபொருள் ஒதுக்கீடு, ஊடகப் பிரிவுக்கான வாகனப் பயன்பாடு, முந்தைய மற்றும் தற்போதைய பாராளுமன்ற காலங்களில் வழங்கப்பட்ட எரிபொருள் விவரங்கள், ஊடக உபகரணங்கள் மற்றும் பணியாளர் விபரங்கள் உள்ளிட்ட பல நிர்வாகத் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
பொதுச் செயலாளரைப் பற்றிய முன் விசாரணை நடத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள், சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான செலவுகள், மின்சாரம்–நீர் கட்டணங்கள், உணவு செலவுகளுக்கான சம்பளக் கழிவுகள் போன்ற விபரங்களும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
