முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தமிழர் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா சபை மற்றும் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல் நடைப்பெற்றுள்ளது

இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை, மனித உரிமைகள், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், வடக்கு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்துள்ளனர்.

வடக்கில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு ஏதுவாக உள்ள புதிய வாய்ப்புக்கள், காணி உரிமை உள்ளிட்ட மனித உரிமைசார் விவகாரங்கள், மீள்குடியேற்றம், பொருளாதார மீட்சி மற்றும் இனநல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலும், இதுபற்றி அரச அதிகாரிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், புத்திஜீவிகள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச் தலைமையில் இலங்கையில் இயங்கிவரும் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு 4 நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச் தலைமையிலான இக்குழுவில் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அப்துர் ரஹிம் சித்தீக், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா, யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜொனி சிம்ஸன், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடேய்னி, ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் இலங்கைக்கிளை தலைவர் ரமாயா சல்காதோ, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி விமலேந்திர ஷரன் ஆகியோர் உள்ளடங்கலாக சுமார் 30 பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தனர்.

இக்குழுவினரால் வடக்கில் நடாத்தப்பட்ட சந்திப்புக்களின் ஓரங்கமாக கடந்த 12 ஆம் திகதி பி.ப 12.30 – பி.ப 3.00 மணி வரை யாழ் திண்ணை ஹோட்டலில் கலந்துரையாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா, இலங்கை தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகிய நால்வருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில், காதர் மஸ்தான் தவிர்ந்த ஏனைய மூவரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழர் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறை, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், வடக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் புதிய வாய்ப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐ.நாவின் பிரதிநிதிகள் மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிந்தனர்.

 

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp