இரண்டு கோடி ரூபாவுக்கும் மேலான மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இலங்கை பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, இந்த போதைப்பொருளை மன்னார் பகுதிக்கு எடுத்துச் செல்ல இரண்டு நபர்கள், நீர்கொழும்பு நகரில் உள்ள ஒரு சொகுசு விற்பனை நிலையம் அருகே காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையில், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அந்த இரு நபர்களையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான் பயணங்களை மேற்கொள்ளும் வர்த்தகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் நாட்டுக்கு வந்தார்.
பயணியின் பையில் ரகசியமாக மறைக்கப்பட்ட இரண்டு பொதிகளில் 2 கிலோ 116 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 2 கோடி 11 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
உடன் கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடையவர்கள். இதில் ஒருவர் தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
