ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இன்று முன்னிலையான போதே சமன் ஏக்கநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதபதி இசுரு நெத்திகுமார உத்தரவுட்டுள்ளார்.
இவ்வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக சட்டமா அதிபரினால் பெயரிடப்பட்டுள்ள அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் பிப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்ய அவரது இல்லத்துக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லையெனவும், அவரது கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க லண்டனில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டிருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைகளை விரைவுபடுத்துமாறு நீதிமன்றம் பணிப்புரை வழங்கியதுடன், அதன் முன்னேற்றங்கள் குறித்து இன்றைய தினம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
