இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதி குறித்த வர்த்தமானியை வெளியிடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமது பிரதான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படாமல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், பொறியியலாளர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அமைச்சர் வர்த்தமானியை வெளியிட்டால், தமக்கு தொழிற்சங்க போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கையை அரசாங்கம் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மறுசீரமைப்புத் திட்டமானது மின்சாரத் துறையில் கட்டமைப்பு மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்பதே பொறியியலாளர்களின் பிரதான கவலையாக உள்ளது.
முறையான பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி மின்சார சபையைத் துண்டு துண்டாகப் பிரிப்பது, நுகர்வோர் மீது மேலதிக செலவுகளைச் சுமத்துவதுடன் மின்சாரத் துறையில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அவசர அவசரமாக மேற்கொள்வது ஏற்கனவே உள்ள பலவீனங்களை புதிய கட்டமைப்பிற்குள் நிரந்தரமாக்கிவிடும் எனப் பொறியியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் தவறுகளைத் திருத்துவது கடினம் என்பதால், அத்திவாரத்தைச் சரியாக அமைக்குமாறு அவர்கள் கோருகின்றனர்.
