பிரேசில்–வெனிசுவேலா எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரேசில் அரசாங்கம் தேசிய பாதுகாப்புப் படையினரை அனுப்ப தீர்மானித்துள்ளது.
வெனிசுவேலாவுடன் எல்லையைப் பகிரும் வடக்கு ரோரைமா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத தங்கச் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ உத்தரவின் படி, தேசிய பொது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான வீரர்கள், எல்லை நகரமான பகராய்மா மற்றும் ரோரைமா மாகாணத்தின் தலைநகரான போவா விஸ்தாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இந்த நடவடிக்கை, பொதுமக்களின் பாதுகாப்பையும் பொது ஒழுங்கையும் உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கொண்டு சென்ற பின்னணியில், பிரேசில் பகராய்மா எல்லைப் பகுதியை தற்காலிகமாக மூடியிருந்தது.
இதனிடையே, வெனிசுவேலா எல்லைப் பகுதியில் தமது இராணுவ இருப்பை அதிகரித்து வருவதாகவும், அப்பகுதியில் வெனிசுவேலா ஆயுதக் குழுக்களும் பிரேசிலைச் சேர்ந்த குற்றக் கும்பல்களும் செயற்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது சரியான நடவடிக்கை என லத்தீன் அமெரிக்க விவகார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வெனிசுவேலாவில் செயற்படும் ஆயுதக் குழுக்களால் ஏற்படும் வன்முறைகள் காரணமாக மக்கள் பிரேசிலுக்குள் நகரும் நிலை காணப்படுவதாகவும், ஆனால் பெருமளவிலான அகதி இடப்பெயர்வு இன்னும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவின் தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து பிரேசிலுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை தூண்டும் வாய்ப்பில்லை என்றும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

