நுரைச்சோலை மின்நிலையத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி கப்பலுக்கான ஆரம்ப கட்ட பணம் செலுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அந்த நிலக்கரியின் தரம் குறித்த சந்தேகங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும், ஒப்பந்த விதிகளின் அடிப்படையில் தரக் குறைபாடு உறுதியாகின் அபராதம் விதித்து இழப்பீடு பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் உள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த லங்கா கோல் நிறுவனத்தின் பொது மேலாளர் நமல் ஹேவகே, நிலக்கரியின் தரம் ஏற்றுமதி துறைமுகத்திலும் இறக்குமதி துறைமுகத்திலும் பரிசோதிக்கப்படுவதாகவும், இறக்குமதி துறைமுகத்தில் பதிவு செய்யப்படும் தரம் குறைவாக இருந்தால் ஆறு முதல் ஏழு அளவுகோல்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவதாகவும் விளக்கினார்.
ஒப்பந்தத்தின் படி முழுத் தொகையும் முன்கூட்டியே வழங்கப்படாது முதலில் 80 சதவீதம் மட்டும் செலுத்தப்பட்டு, மீதமான 20 சதவீதம் பின்னர் தீர்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கப்பலுக்கான முழு கட்டணம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்தியாவில் இருந்து பெறப்பட வேண்டிய தர அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதிக்குள் கிடைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஒப்பந்தப்படி ஆரம்ப கட்ட பணம் செலுத்தத் தவறினால் வழங்குநர் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும், கடன் கடிதம் திறத்தல், வங்கி நடைமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் பணம் செலுத்தும் செயல்முறை சில நாட்கள் எடுத்துக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, தென்னாபிரிக்காவிலிருந்து புதிய இந்திய வழங்குநர் மூலம் கொண்டு வரப்பட்ட 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
அந்த கப்பலில் இருந்து பெறப்பட்ட மூடிய மாதிரிகள், மின்நிலைய அதிகாரிகள் முன்னிலையில் சேகரிக்கப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் கோடெக்னா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்றுமதி துறைமுகத் தரவுகளில் குறிப்பிட்டதை விட குறைந்த கலோரிப் பெறுமதி காணப்பட்டால் மின்உற்பத்தித் திறன் குறையலாம் மற்றும் நிதி இழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் இவ்வாரத்திற்குள் கிடைக்கும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
