சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தாலும், அதற்கேற்ப வெளிநாட்டு நாணய வருமானம் நாட்டுக்குள் வரவில்லை என்ற கவலைக்கிடமான விடயத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தாலும், சுற்றுலாத்துறையிலிருந்து கிடைத்த மொத்த வருமானம் அமெரிக்க டொலர் 3.22 பில்லியன் அளவிலேயே இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் செலவிடும் சராசரி தொகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாத்துறையிலிருந்து கிடைக்க வேண்டிய வெளிநாட்டு நாணய வருமானம் மத்திய வங்கியின் கையிருப்புகளில் சரியான அளவில் பிரதிபலிக்கவில்லை என்றும், இதன் பின்னணியில் சட்டவிரோத பரிவர்த்தனைகள், கண்காணிப்பு குறைபாடு உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டில் சுமார் 40 ஆயிரம் ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும், இதனால் அரசுக்கு வரவேண்டிய வருமானம் இழக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இணையவழி முன்பதிவு தளங்கள் மற்றும் வெளிநாட்டு கிரெடிட் கார்டுகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் வெளிநாடுகளில் நடைபெறுவதால், அந்த பணம் இலங்கை வங்கித் துறைக்குள் வராமல் தப்புவதாகவும் அவர் எச்சரித்தார்.
இந்த நிலைமை தொடர்பில், சுற்றுலாத்துறையிலிருந்து உண்மையில் எவ்வளவு வெளிநாட்டு நாணயம் நாட்டுக்குள் வங்கிகள் வழியாக மாற்றப்பட்டுள்ளது, அது மத்திய வங்கியின் கையிருப்புகளில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ரவி கருணாநாயக்க கோரினார்.
வெறும் சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையை முன்னிறுத்தாமல், உண்மையான வருமானம், வெளிநாட்டு நாணயப் பெருக்கம் மற்றும் நாட்டின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் தெளிவான சுற்றுலா கொள்கையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயத்தில் மேலதிக விளக்கம் வழங்க அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளது.
