குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்திற்கு வெளியே இரு கமாண்டோக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கி வேறு குற்றங்களில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதவான் கசுன் திசாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச பகுப்பாய்வாளர் பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து, ரூ.200,000 பிணையில் அந்த ஸ்னைப்பர் துப்பாக்கியை இலங்கை இராணுவத்திடம் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைகளுக்காக தேவையான நேரங்களில் ஆயுதத்தை நீதிமன்றம் பார்வையிடும் வகையில் ஆயுதம் இருக்க வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கியின் பெறுமதி ரூ.6.2 மில்லியன் என குற்றப்புலனாய்வு திணைக்களம நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, குற்றப்புலனாய்வு திணைக்கள கட்டடத்துக்கு அருகிலுள்ள துறைமுக நுழைவாயில் பகுதியை ஒட்டிய ஹார்பர் மாஸ்டர் அலுவலகத்திற்கு அருகே, குறித்த ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பொதுமக்கள் உடையில் இருந்ததுடன், கருப்பு துணியில் மூடிய நிலையில் துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என குற்றப்புலனாய்வு திணைக்கள தெரிவித்துள்ளது.
சிரேஸ்ட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை இலக்காகக் கொண்டு ஸ்னைப்பர் ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகி, கைது செய்யப்பட்ட இருவரும் துறைமுக வளாகத்திற்குள் நடைபெற்ற பணய கைதிகள் மீட்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ கமாண்டோக்கள் என தெரிவித்தார்.
சிறப்பு பயிற்சியிலிருந்து திரும்பும் போது பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்ததால் மாற்றுப் பாதையில் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், குறித்த ஸ்னைப்பர் துப்பாக்கியை எடுத்துச் செல்ல அவர்களுக்கு உரிய அனுமதி இருந்ததாகவும் இராணுவ சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
