உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரையானது இன அழிப்பிற்கான அடையாளம் – அருட்தந்தை மா.சத்திவேல்

இன அழிப்பை தொடர்வார்கள் என்பதற்கான அடையாளங்களாகவே சட்ட விரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் அமைந்துள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இராணுவத்தினரால் தையிட்டியில் பலவந்தமாக கட்டப்பட்டுள்ள விகாரை சட்டத்துக்கு விரோதமானது. அதனால் தமது சொந்த நிலங்களை இழந்துள்ள மக்களும் ஒட்டுமொத்த தமிழர்களும் ஓங்கி குரல் எழுப்பிக்கொண்டிருக்கையில் விகாரைக்கு அண்மையில் மீண்டும் சட்ட விரோதமாக பிக்குகள் தங்கும் மடாலயம் ஒன்று கட்டப்பட்டு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தனபாலினால் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை தமிழர்கள் மத்தியில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விகாரை விடயம் மீண்டும் தமிழர்களின் நீதிக் குரலை இராணுவத்தின் சப்பாத்துக்காலால் மிதித்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் தேசிய மக்கள் சக்தியும் அடக்கும் என்பதை நிரூபித்துள்ளதோடு இது தமிழர்களை மீண்டும் போராட்ட வன்முறைக்கு தூண்டி பயங்கரவாதிகளாக்கும் அரச பயங்கரவாதத்தின் வன்முறையை கண்டிப்பதோடு அண்மித்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் இதற்கு தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் வடக்குக்கு தேர்தல் காலங்களில் வந்தபோது மக்கள் பெரும் ஆரவாரத்தோடும் மேளதாளங்களுடனும் வரவேற்று பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றதோடு வாக்குகளையும் அள்ளிக் கொடுத்தனர்.

அத்தகைய மக்களை சிங்கள பௌத்த பேரினவாத ஆயுதத்தால் முதுகில் குத்திக் கிழித்து காயப்படுத்தியுள்ளமை ஆட்சியாளர்களின் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிரான போலி முகத்திரையை கிழித்து தமிழர்களுக்கு எதிரான அவர்களின் அடுத்த கட்ட யுத்த முகம் வெளிப்பட்டுள்ளது எனலாம்.

அது மட்டுமல்ல கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அவர்களுக்கு பின்னால் அணி திரண்டு வாக்களித்தவர்களும் அவர்களுக்காக தம்மை அரசியல் மற்றும் கல்வி புத்தி ஜீவிகளாக அடையாளம் காட்டிக்கொண்டவர்கள் மட்டுமல்ல. தற்போது தேசிய மக்கள் சக்தியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட துடித்துக் கொண்டிருப்பவர்களையும் தலை கவிழ வைத்துள்ளது தற்போதைய தையிட்டி விகாரையின் நிலை.

தேசிய மக்கள் சக்தி சார்பில் வடக்கு, கிழக்கில் நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்களும், வடக்கு மாவட்ட சபையின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் தையிட்டி விகாரை விடயமாகவும் மற்றும் நிலமிழந்தோர் சம்பந்தமாகவும் நீதி நிலைநாட்டப்படும் என வாய் கிழிய கத்தினார்கள். இனி அவர்கள் எந்த முகத்தோடு மக்கள் முன் தோன்றுவார்கள்? அமைச்சர் எவ்வாறு மாவட்ட அபிவிருத்தி சபையில் தலைமை பதவியில் தொடர்ந்து இருப்பார்?

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும் அபிவிருத்தி சபை தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களின் அனுமதி மற்றும் ஆசிர்வாதத்தோடுமே இரண்டாவது சட்டவிரோத கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனலாம். யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பங்கேற்பு அரசின் பங்கேற்பையும் ஆசீர்வாதத்தையும் உறுதிப்படுத்துகின்றது.

தேசிய மக்கள் சக்தி முகம் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் கட்டமைப்பும் அடிப்படையில் பேரினவாத சிங்கள பௌத்த கட்டமைப்பே. இதனை தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டே இவர்கள் அரசியல் செய்ய நினைப்பது நாட்டை மேலும் பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கு, கிழக்கில் படைத்துறை கட்டமைப்பை அகற்றவோ மாற்றி அமைக்கப்போவதோ இல்லை. இதற்கு துணையாகவும் சமமாகவும் சிங்கள பௌத்த கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்தி இன அழிப்பை தொடர்வார்கள் என்பதற்கான அடையாளமாகவே சட்ட விரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் அமைந்துள்ளன.

பேரினவாத பிக்கு ஒருவர் மடாலய ஆலய திறப்பினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ‘மடாலய திறப்பு நாளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மடாலய வளாகத்தில் இருந்து பாதுகாப்பு படையினரை மீளப்பட்டுள்ளது. இவ்விகாரை மற்றும் மடாலயத்தின் பாதுகாப்பு சிங்கள பௌத்தர்களின் கையிலே தங்கியுள்ளது. அதன் விளைவுகளை ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்’ எனும் தொனியில் பேசியிருப்பது மதவாத வன்முறைக்கு தொடர்ந்தும் சிங்கள பௌத்தர்களை அணி திரட்டுவதாகவே உள்ளது.

இதனை கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் ஆட்சியாளரும் இல்லை. ஏனெனில், அதற்கு பின்னால் நின்று இவர்களும் ஆட்சி செய்கின்றார்கள். தொடர்ந்தும் ஆட்சி செய்ய விரும்புகின்றார்கள்.

இந்நிலையில் தேசிய மக்கள் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியவர்களும், இவர்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்துபவர்களும் சட்டவிரோத விகாரை மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மடாலயம் விடயத்தில் மக்களின் மன நிலையில் நின்று தமது கருத்தை வெளிப்படுத்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்கு வடக்கு, கிழக்கு தமிழர்கள் விரும்பும் சாதகமான பதில் கிடைக்காதவிடத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் போட்டியில் இருந்து விலகவும் முடிவெடுக்க வேண்டும். தொடர்ந்து வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு நாடாளுமன்றில் அடுத்த கட்ட நகர்வை அவசரமாக முன்னெடுக்கவும் வேண்டும்.

தமக்கான சாதகமான தெளிவான அவசரமான பதில் அரசாங்கத்திலிருந்து கிடைக்கவில்லையேல் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தமது ஆதரவினை எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் விலக்கிக்கொள்வதோடு தாம் விரும்பும் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் மாற்றுக் கட்சிக்கு அளித்து தமிழர்களின் எதிர்கால அரசியலை பலப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றோம்.

தற்போதும் பேரினவாத சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பிலேயே நம்பிக்கை வைத்து அதனையே தொடரும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிட்டப் போவதில்லை என்பதை கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் தேசம், தேசியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இணைந்து உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி தமிழர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்து மக்களின் நம்பிக்கையை தக்கவைக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

தமிழ் கட்சிகள் பலமாக ஒன்றிணையக் கூடாது என்பதே பேரினவாத கட்சிகளினதும் அக்கட்சிகளோடு ஒட்டி அரசியல் செய்யும் தமிழ் ஒட்டுண்ணி மற்றும் புல்லுருவி அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடாகும். இது தோற்கடிக்கப்பட வேண்டும்.

எனவே சட்ட விரோத தையிட்டி மற்றும் மடாலயம் தொடர்பில் இதுவரை கொண்டிருக்கும் பிரிவினைவாத, கட்சி மைய அசமந்த அரசியல் நிலைப்பாட்டை தவிர்த்து தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுக்க அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கூட்டு சேர்வதோடு சமய அமைப்புகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் கருதி தமது முழுமையான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp