இலங்கையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு உச்ச நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, முன்மொழிந்துள்ளார்.
சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஏ. ஸ்டாரை நேரில் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அந்த அனுபவம், இலங்கையிலும் ஒருங்கிணைந்த மற்றும் குறிக்கோள் மையப்படுத்தப்பட்ட நிறுவனம் அவசியம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் இருந்தாலும், அவை சிதறிய அமைப்பில் செயல்படுவதோடு, போதிய நிதி ஆதரவும் ஒருங்கிணைந்த தேசியத் திட்டமிடலும் இல்லாமல் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய நிறுவனத்தின் முக்கிய கவனப் பகுதிகளாக விவசாய உயிரியல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கான தாங்குத்திறன், அரிசி, தேயிலை மற்றும் தென்னை ஆராய்ச்சி, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், குளிர்சாதனச் தொடர்ச்சி, வெப்ப வலய சுகாதாரம், உயிரியல் மருத்துவம், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மேம்பட்ட உற்பத்தி, மின்னணு சாதனங்கள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு, அரசுத் தொழில்நுட்பம், மற்றும் அனர்த்த முன்னறிவிப்பு ஆகியவை அடங்கும் என அவர் விளக்கினார்.
ஏ. ஸ்டார் அமைப்பின் குறிக்கோள் சார்ந்த செயற்பாடு, அரசின் வலுவான ஆதரவு, தொழில்துறை மைய அணுகுமுறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உலகளவில் பாராட்டப்படுகின்றன என்றும், இந்தியாவின் சீசர் நிறுவனம் தென் கொரியாவின் கிஸ்ட் போன்ற நிறுவனங்களிடமிருந்தும் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தனது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 1 சதவீதத்தை அரசு முதலீடாகவும் மேலும் 1 சதவீதத்தை தனியார் துறை பங்களிப்பாகவும் ஆராய்ச்சி மற்றும் புதுமைக்காக ஒதுக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
