கண்டி மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நடைபாதைகளில் வியாபாரம் செய்வது தொடர்பில் மோசடி நடைபெறுவதாக கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்
கண்டி மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நடைபாதைகளில் வியாபாரம் செய்து வந்த முன்னாள் தெரு வியாபாரிகளுக்கு மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வியாபாரிக்கும் தலா 100 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இடங்கள் வழங்கப்பட்டு, அவற்றுக்காக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகர சபையின் கோரிக்கைக்கு அமைவாக நடைபாதை வியாபாரிகள் 71 பேரின் பெயர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் ஏற்கனவே புதிய இடங்களுக்காக பதிவு செய்துள்ளதாக கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
அததுடன் 17 பழ வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களும் நேற்று முதல் புதிய இடங்களுக்காக பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடைபாதைகளில் வியாபாரம் செய்வது தொடர்பில் மோசடி நடைபெறுவதாகவும் முதல்வர்; குற்றம் சாட்டினார்.
அசல் வியாபாரிகள் தங்களுக்குக் கிடைத்த இடங்களை புதிய வியாபாரிகளுக்கு தினமும் 1,500 ரூபாய் வசூலித்து விற்பனை செய்து வந்ததாக அவர் கூறினார்.
மாநகர சபைக்கு சொந்தமான சொத்துகளை யாரும் விற்பனை செய்ய முடியாது என அவர் வலியுறுத்தினார்.
மேலும், எந்த சூழ்நிலையிலும் இனி நடைபாதைகளில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும், அதனை மீறி செயற்படும் வியாபாரிகள் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் கண்டி மாநகர முதல்வர் மேலும் தெரிவித்தார்.
