காணாமல் போனோர் பற்றிய முறைப்பாடுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தீர்மானித்துள்ளது.
இதற்கான விசேட விசாரணைக்குழுக்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது குறித்து அந்த அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகநாதன் தற்பரன் தெரிவிக்கையில், தற்போது சுமார் 16,500 உறுதிப்படுத்தப்பட்ட முறைப்பாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
விசாரணைகளைத் துரிதப்படுத்த 25 விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளதுடன், முதலாம் ஆண்டில் 5,000 முறைப்பாடுகளைக் கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிலவி வந்த ஊழியர் பற்றாக்குறையை நீக்க 69 புதிய பணியாளர்கள் விரைவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், அவர்கள் காணாமல் போன காலப்பகுதியில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் திருப்திகரமான மற்றும் நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கச் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
