உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய கத்துவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜாஸ்மினை கைது செய்ய திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க கத்தோலிக்க திருச்சபை முன்வர வேண்டும் என அந்தக் கட்சியின் முக்கிய பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், சாரா ஜாஸ்மினை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை அரசாங்கம் நாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாரா ஜாஸ்மின் உயிருடன் இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு சாய்ந்தமருதுவில் அவர் உயிரிழந்ததாக 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டு டி.என்.ஏ. பரிசோதனைகளில் அவர் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தி வருவதாகவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரா ஜாஸ்மின் உயிருடன் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், இந்த விவகாரத்தில் முழுமையான உண்மை வெளிப்பட கத்தோலிக்க திருச்சபையின் தலையீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
