ஈரானில் பொருளாதார நெருக்கடிகளும், ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்களும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், அதிகாரிகள் நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (ஜனவரி 9) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கிய பின்னர், ஈரானில் இணைய சேவைகள் பெரிதும் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு நெட்ப்ளொக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஈரானிய இளவரசர் ரெசா பஹ்லவி விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வாட்ஸ்அப் ஃபேஸ்டைம் போன்ற சேவைகளும் முடங்கியுள்ளன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
