ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் இளைஞர் வேலை இல்லாமை பிரச்சினைக்கு தீர்வு காண, இளைஞர் தொழிலாளர் படைக்கு தேவையான திறன்களை வழங்குவது மிக முக்கியமானதாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத் துறை இயக்குநர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் சில பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி வலுவாக காணப்பட்டாலும், அந்த வளர்ச்சி போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
பிராந்தியத்தில் மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு காரணமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக சில நாடுகளில் இளைஞர் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து, தொழிலாளர் படையில் புதியவர்கள் அதிகமாக இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் முக்கியமான கேள்வி என்னவெனில், தற்போதைய பொருளாதார வளர்ச்சி போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வலிமையுடையதா என்பதாகும் என குறிப்பிட்ட அவர் பல நாடுகளில் இந்த வளர்ச்சி வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் சமநிலையிலில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த இடைவெளிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக முதலீட்டு குறைபாடு குறிப்பிடப்பட்டது.
தொழில்நுட்பத் துறையைத் தவிர, தனியார் முதலீடுகள் பல நாடுகளில் இன்னும் பலவீனமாகவே உள்ளன.
ஆனால் இதைவிட முக்கியமான அம்சமாக தொழிலாளர் படைக்கு திறன் மேம்பாடு அளிப்பதே எனஸ்ரீனிவாசன் வலியுறுத்தினார்.
கிடைக்கும் வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை பணியாளர்கள் பெற்றிருக்க வேண்டும். இது பல ஆசிய நாடுகளுக்கு அவசியமான கட்டமைப்பு மாற்றமாகக் கருதப்படுகின்றது.
கல்வி முறைமைகளை மேம்படுத்தி, தொழிலாளர் படையின் திறன்களை உயர்த்தும் நாடுகள் தங்கள் பணியாளர்களை வேலைக்கு ஏற்றவர்களாக மாற்றுகின்றன. இதன் மூலம் இளைஞர் வேலைஇல்லாமை கணிசமாக குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
