வாடகைச் சட்டங்களில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளுக்கு விளக்கம் அளித்த நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, வீடுகளையோ கட்டடங்களையோ வாடகைக்கு விடும் தனிநபர்கள் அல்லது வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென அச்சப்படத் தேவையில்லை என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது அமலில் உள்ள வாடகைச் சட்டத்தை ரத்து செய்து ‘குடியிருப்போரின் பாதுகாப்பு சட்டம்’ ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமூலங்கள் குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளித்த அவர், இந்த இரண்டு சட்டமூலங்கள்; நிபுணர்கள் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்டதாகவும், சட்ட மற்றும் நடைமுறை செயல்முறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னரே முன்வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இரண்டு வரைவு சட்டமூலங்களும் 2025 செப்டம்பர் 18ஆம் தேதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும், பின்னர் 2025 நவம்பர் 4ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 15ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து பெறும் செயல்முறைக்கு விடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்தக் காலப்பகுதியில், அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்திலும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி செய்தித்தாள்களிலும் இவ்வரைவு சட்டங்கள் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பக் கலந்துரையாடல் காலப்பகுதியில் வெறும் இரண்டு உத்தியோகபூர்வ பரிந்துரைகளே கிடைத்ததாகவும், இச்சட்டங்கள் ரகசியமாக கொண்டு வரப்படவில்லை என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
‘இது பின்வாயிலாக கொண்டு வரப்படும் சட்டமல்ல. இந்நாட்டின் மக்களுக்கு சிறந்த சட்ட அமைப்பை உருவாக்குவதே எமது நோக்கம்’ என அவர் கூறி, அரசியல் சார்பில்லாமல் அனைத்து தரப்பினரும் பயனுள்ள பரிந்துரைகளை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
