இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில், ஷரியா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவும் மதுபானம் அருந்தியதற்கும் ஒரு இளம் ஜோடி பொதுமக்கள் முன்னிலையில் மொத்தம் 140 கசை அடி தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
21 வயதுடைய பெண் தண்டனை வழங்கும் போது மயங்கியதால், பெண் அதிகாரிகள் அவரை ஆம்புலன்சில் அனுப்பினர்.
அதே நாளில், இஸ்லாமிய மதப் பொலிஸ் படை அதிகாரி ஒருவர் உட்பட மேலும் நால்வரும் ஷரியா சட்ட மீறலில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
குறிப்பாக, அந்த அதிகாரி தனியிடத்தில் பெண் ஒருவருடன் இருந்த குற்றச்சாட்டில் 23 கசை அடிகள் பெற்றதுடன், அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசே மாகாணத்தில் இஸ்லாமிய சட்ட மீறல்களுக்கு கசை அடி தண்டனை வழங்குவது வழக்கமானதாக இருந்தாலும், மனித உரிமை அமைப்புகள் இதை மனிதாபிமானமற்றதாக விமர்சித்து வருகின்றன.
அங்கு நடைமுறையில் உள்ள சட்டப்படி, திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவுக்கு 100 கசை அடிகளும், மதுபானம் அருந்துவதற்கு 40 கசை அடிகளும் தண்டனையாக விதிக்கப்படுகின்றன.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இத்தண்டனைகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும், தண்டனைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் விதிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
