அகில இலங்கை YMMA பேரவையின் 57வது தேசிய தலைவராக பதவியேற்ற தனது முன்னாள் மாணவரான ஜனாப் முஹம்மத் ரியால் முஹம்மத் ஸியாத் அவர்களை கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு விழா, க/வ/ அல் சபா மகா வித்தியாலயம், வத்தேகெதர, பொல்கொல்ல, கண்டியில் சிறப்பாக நடைபெற்றது.
ஜனாப் ஸியாத் அவர்களின் இல்லத்திலிருந்து பாடசாலை வளாகம் வரை ஊர்வலத்துடன் விழா ஆரம்பமானது. பாடசாலை இசைக்குழு முழங்க, குடும்பத்தினர், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அல் சபா மகா வித்தியாலயத்தை வந்தடைந்ததும், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களால் அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் மற்றும் பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள், வத்தேகெதர ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் உடதலவின்ன ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபர், பத்ததும்பர பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கிராம இளைஞர் தலைவர்கள் மற்றும் ஏராளமான நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
வரவேற்புரை ஆற்றிய அதிபர் அவர்கள், ஜனாப் ஸியாத் அவர்களின் சாதனையில் தான் அடையும் பெருமையை வெளிப்படுத்தியதுடன், இந்த நியமனம் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் கிடைத்த பெரும் கௌரவம் என்று குறிப்பிட்டார்.
ஜனாப் ஸியாத் அவர்களின் முன்னாள் ஆசிரியையான திருமதி ஸிபாயா ரஷீட் அவர்கள், அவரது பாடசாலை கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவரது முன்மாதிரியான குணம், கல்வி மீதான அர்ப்பணிப்பு மற்றும் ஆரம்பகால தலைமைத்துவ பண்புகள் அவரது எதிர்கால வெற்றிக்கு வித்திட்டதாக நினைவு கூர்ந்தார்.
வத்தேகெதர YMMA உறுப்பினரில் இருந்து ACYMMAC தேசிய தலைவர் வரை ஜனாப் ஸியாத் அவர்களின் பயணம் என்ற தலைப்பில், அகில இலங்கை YMMA பேரவையின் பிரதி தலைவர் ஜனாப் N.M. நிஃப்ராஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதில் ஜனாப் ஸியாத் அவர்களின் YMMA இயக்கத்தினூடான உத்வேகமான பயணம், சமூக சேவை, இளைஞர் அபிவிருத்தி மற்றும் தேசிய தலைமைத்துவத்திற்கான அவரது நீண்டகால அர்பணிப்பு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன.
அவரது சிறப்பான அர்பணிப்பிற்கு அங்கீகாரமாக, ACYMMAC-ன் தேசிய தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை முன்னிட்டு ஜனாப் ஸியாத் அவர்களுக்கு சிறப்பு கௌரவ விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாப் ஸியாத் அவர்கள், அல் சபா மகா வித்தியாலயத்தில் தான் பெற்ற கல்விப் பயணத்தையும், ஆசிரியர்கள், குடும்பம் மற்றும் சமூகத்தால் தன்னிடம் விதைக்கப்பட்ட பெறுமதிகளையும் நினைவு கூர்ந்தார். தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவும், நேர்மையை கடைபிடிக்கவும், சமூகத்தின் மேம்பாட்டிற்காக சமூக சேவையில் தீவிரமாக ஈடுபடவும் இளம் சந்ததியினரை அவர் ஊக்குவித்தார்.
பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் A.A.M. அஸ்ரின் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும், இந்த முக்கிய மைல்கல்லை கொண்டாட வந்திருந்த அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
ஜனாப் முஹம்மத் ரியால் முஹம்மத் ஸியாத் அவர்களின் சாதனைகளை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், மாணவர்களையும் இளைஞர்களையும் தலைமைத்துவத்திலும் சமூக சேவையிலும் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இந்த பாராட்டு விழா அமைந்தது.
நிருபர்
கே எ ஹமிட்

What’s your Reaction?

