ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை (18.05.2026) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ், “முழு நாடும் ஒன்றாக” எனும் தொனிப்பொருளில், விஷப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையின் வழிநடத்தலில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஜனாதிபதி எதிர்வரும் 20.05.2026 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது, தேசிய செயற்திட்டம் தொடர்பான விளக்கவுரையை பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் எம்.எச். முர்சிதீன் வழங்கினார்.
மேலும், செயலகத்தின் ஒன்பது கிராம சேவை பிரிவுகளின் ஊடாக அனைத்து கிராமங்களிலும் விநியோகிக்கப்படுவதற்கான சுவரொட்டிகள், பெனர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியன பிரதேச செயலாளரினால் கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் செயலகத்தை அண்மித்த பகுதிகள், ஓட்டமாவடி பிரதான பால நுழைவாயில் மற்றும் நாவலடி சந்தி உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.


