இவ்வாண்டில் வெளியாகிய கல்வி பொது உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டியை சேர்ந்த திரு. திருமதி. இரவிச்சந்திரன் மனோகரி தம்பதிகளின் புதல்வன் செல்வன் பவதாருணன் அவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அம்பாறை மாவட்டத்தில் 14வது இடத்தையும் தேசிய மட்டத்தில் 840 வது இடத்தையும் பெற்று புதிய வளத்தாப்பிட்டி வரலாற்றில் முதல் பொறியியல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை கிராமத்துக்கும் எதிர்கால கல்வி சமுதாயத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன், புதிய வளத்தாப்பிட்டி வரலாற்றில் இதுவே முதல் சாதனை. இவரை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உபதவிசாளர் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மனதார வாழ்த்தியதுடன், பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து அவரை கௌரவித்துள்ளார். இது தொடர்பாக சாதனை மாணவன் பவதாருணன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இரவு பகலாக தன்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் கற்றல் விடயங்களில் அர்ப்பணிப்புடன் செலவிட்டதாகவும், தனது தந்தை மற்றும் தாய் தனக்கு பக்கபலமாக இருந்து மிகுந்த கஷ்டத்திற்கு, சிரமத்திற்கு மத்தியிலும் சற்றும் சோர்வடையாமல் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பே இந்த அடைவுக்கான பிரதான காரணம் என்பதுடன், சம்மாந்துறை வீரமுனையைச் சேர்ந்த கல்விமான்கள் மற்றும் மூத்த வழிகாட்டிகள் தனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து கற்றல் செயல்பாடுகளில் தன்னை வழி நடத்தியதாகவும் குறிப்பிட்டு கூறியதுடன், தனது பெற்றோருக்கும், தன்னுடைய பாடசாலையான கல்முனை Carmel Fetrima College தேசிய பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் தனக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், பிரத்தியேக கல்வி நிலையங்களில் கற்பித்த ஆசிரியர்களுக்கும், தனக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கும், தன்னுடைய இந்த அடைவுக்கு காரணமான உதவிய அனைவருக்கும் நன்றிகளை செலுத்துவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

