மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மக்களின் நலன்களையும், அவர்களது உண்மையான எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையகாலமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதாகவும், உருப்படியான தீர்வுகள் எட்டப்படுவதில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, அதிகாரிகள் மீது வீணான குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு, தலைமை தாங்குபவர்கள் பொறுப்பற்ற ரீதியில் நகர்ந்து செல்லும் போக்கு அதிகரித்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
இதனால் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்படுகின்றன. இரு தரப்பு முரண்பாடுகளால் எவ்வித முன்னேற்றமும் இன்றி, அரச நிதி மாத்திரம் வீணடிக்கப்பட்டு கூட்டங்கள் நிறைவடைவதாக மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்களை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்களின் நலன்களைப் பேணக்கூடிய அல்லது பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய முறையான அணுகுமுறைகளையோ, பொறிமுறைகளையோ அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.”
மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் என்பது துறைசார் அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசித்து தீர்வுகளை எட்டும் இடமாகும். ஆனால், தற்போது அதிகாரிகளும் பொதுமக்களும் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகத் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மக்களின் நலன்கள் மற்றும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் தரம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
