சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் வரை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் பல பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தவும் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இந்த விசேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
பயணிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் இலங்கை புகையிரத திணைக்களமும் புத்தாண்டு நிமித்தம் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
கரையோர மார்க்கம், வடக்கு மற்றும் பிரதான மார்க்கங்களில் தற்போது பயணிக்கின்ற புகையிரதங்களுக்கு மேலதிகமாக மேலும் சில விசேட புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
