முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு எஸ்.சிறிதரன் எம்பி வேண்டுகோள்

நியாயமான காரணிகளை கருத்திற்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டுக்கு சிறந்ததாக அமையும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் விசேட ஒதுக்கீடு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் 60:40 என்ற நிலையால் சரியான உள்ளூராட்சி சபைகளை அமைக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இதனால் தொங்கு நிலையிலான உள்ளூராட்சி மன்ற சபைகளே தோற்றம் பெறுகின்றன.

ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த காலி மாவட்டம் எல்பிட்டி தேர்தல் தொகுதியில் தொங்கு நிலையிலான வெற்றியே பெற்றுள்ளது.

இந்நிலைமையே அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் சகல அரசியல் கட்சிகளிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் அந்த வாக்குகள் எண்ணப்படுவதில்லை.

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளை பெற்றுக்கொள்ளாவிடினும் அந்த வாக்குகள் எண்ணப்படும்.
இதனால்தான் மேலதிக உறுப்பினர்கள் தெரிவு தோற்றம் பெறும். ஆகவே, அரசாங்கம் இவ்விடயத்திலும் கவனம் கொண்டிருக்கலாம்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தற்போது சமர்ப்பிக்கப்பட்டு 21 நாட்கள் விவாதிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளது.

அத்துடன் பண்டிகை காலமும் உள்ளது. ஆகவே இவ்வாறான நிலையில் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தலை நடத்துவது அனைவருக்கும் நெருக்கடியானதாக அமையும்.

அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் உள்ளது. அத்துடன் சட்டமூலம் குறித்து அரசாங்கம் வியாக்கியானம் அளித்துள்ளது.

ஆகவே, ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்த வேண்டும். திருத்தங்களுடன் சட்டமூலத்தை நிறைவேற்றினால் அது நாட்டுக்கு சிறந்ததாக அமையும் என்றார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp