இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
அதன் போது , தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி. உள்ளிட்ட இருவரை அழைத்து ஐரோப்பிய ஒன்றியத்தினர் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினரை செம்மணி புதைகுழி வாசலில் சந்தித்திருக்கிறோம். அவர்களிடம் எங்களுடைய உயிருக்கு மேலான கோரிக்கையான மகஜரையும் கையளித்திருக்கின்றோம்.
தாங்கள் தங்களால் இயன்ற வரைக்கும் எங்களுக்காக வேலை செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
எங்களுக்கு எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது, என தெரிய வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை தான் நடந்தது என்பதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதனூடாக சர்வதேச நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.. உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக விசாரணைகளையோ அல்லது OMP அலுவலகம் மாதிரி இலங்கை அரசால் அமைக்கப்படுகின்ற அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் எங்களுக்கான நீதியை தரப்போவது இல்லை.
நாங்கள் எத்தனையோ ஆணைக்குழுக்களை சந்தித்திருக்கிறோம், ஆட்சி செய்கின்ற அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்திருக்கின்றோம்.
அது எதுவும் எமக்கு எதனையும் பெற்று தரவில்லை என்ற பிற்பாடு தான் நாங்கள் சர்வதேசத்தின் ஊடான ஒரு விசாரணையை கோரி நிற்கின்றோம்.
நாம் சர்வதேச விசாரணையை கோரி நிற்கிறோம் என்றால், சர்வதேசம் எங்களுக்கு ஒரு சரியான நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் தான் சர்வதேச தரப்புக்களிடம் கோரிக்கையையும் மனுக்களையும் கையளித்துக் கொண்டிருக்கிறோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் இதுவரையில் 450 பேருக்கு மேல் எங்களோடு இருந்தவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். எங்களுடைய உறவுகளுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
கொடூர யுத்தமும் இன அழிப்பும் நடந்த பிற்பாடு கையளித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம் தான் தகவல்களை பெற்று வெளிப்படுத்த வேண்டும். கொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
எத்தனையோ விசேட தூது குழுக்கள், பிரதிநிதிகள் இங்கே வந்து போயிருக்கின்றார்கள். ஆனால் இதுவரைக்கும் எங்களுக்கு எந்தவிதமான ஒரு நல்லதொரு வார்த்தைகளை அவர்கள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
ஆகவே, நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவாக இங்கே வந்திருக்கிறீர்கள். ஐநா மன்றத்தில், மனித நேயங்களை நேசிக்கின்ற நாடுகளில் எங்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து, எங்களுக்கான சர்வதேச நீதிக்கான விசாரணையை நீங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும் என்று கூறி, அறிக்கை எமது அறிக்கையை கையளித்தோம்.
எமது இந்த அறிக்கை , அறிக்கை மட்டுமல்ல எங்களுடைய உயிரை உங்களுடைய கையிலே ஒப்படைத்திருக்கின்றோம் என்று கூறி அதனை கையளித்தோம் என தெரிவித்தார்.

What’s your Reaction?

