மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதை தடுக்கவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி சந்தோசம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பங்களின் கொலை, கொள்ளை , ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஆரம்பித்து உள்ள நிலையில் பல ராஜபக்சக்கள் சிறை செல்லவுள்ளனர்.
இவ்வாறான ஒரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்ச அமெரிக்க பிரஜா உரிமை கொண்ட நபராக காணப்படுகிறார்.
அவரை விசாரிப்பதற்காக இலங்கை நீதிமன்றம் சிவப்பு பிடியானை பிறப்பித்துள்ள நிலையில் நீர் கொழம்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிட்ட அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தங்களுடைய நாட்டு பிரஜை ஒருவரை திறந்த பிடியானை மூலம் ஒரு நாட்டுக்கு அனுப்பும் போது அந்த நாட்டில் உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்பது தொடர்பில் விசேடமாக ஆராய்வார்கள்.
அந்த வகையில் பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதற்காக இந்த கலவரம் திட்டமிட்ட முறையில் ராஜபக்சக்களினால் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.
இவ்வாறான ஒரு நிலையில் நீர் கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தை வெறுமனே பாதாள குழுக்களினால் ஏற்படுத்தப்பட்டது என கடந்து சென்றுவிட முடியாது.
நாட்டின் ஜனாதிபதி அனுத குமார திசாநாயக்கா குறித்த விடயம் தொடர்பில் விரிவான ஒரு விசாரணையை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?

