யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (01.07.2026) பிற்பகல் 03.00 மணிக்கு மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்களிலுள்ள சமூக மட்ட அமைப்புக்களை அழைத்து அவர்களின் தேவைப்பாடுகள், பிரச்சினைகளை அடையாளம் கண்டு உதவித் திட்டங்கள் வழங்குவதே நோக்கமாகும். மேலும், ஒஸ்மானியா கல்லூரி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி, உட்கட்டுமான தேவைப்பாடுகள், வாழ்வாதாரம், வீட்டுத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இக் இக்கலந்துரையாடல் அமையும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய கெளரவ அமைச்சர் அவர்கள், முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகளை கலந்துரையாடுவதற்கே இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை படிப்டியாக காண வேண்டும் எனவும், இக் கலந்துரையாடலில் பழைய விடயங்களை தவிர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்து, கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?

