மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்
அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30.06.2026) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நீண்டகால மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை மேய்ச்சல் நிலமாக அறிவித்து வர்த்தமானி வெளியிடுதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், முந்தானையாறு அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துதல், கிரான் பாலம் மற்றும் பொண்டுகள்சேனை பாலம் அமைத்தல், மண்டூர் பாலம் மற்றும் பட்டிருப்பு பாலம் அமைத்தல் ஆகிய முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும், மண்டூர்–குருமன்வெளி, அம்பிளாந்துறை–குருக்கள்மடம், திகிலிவெட்டை–சந்திவெளி மற்றும் நரிப்புல்தோட்டம்–பாங்குடாவெளி ஆகிய பகுதிகளை இணைக்கும் நான்கு புதிய பாலங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மனித–யானை மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், மட்டக்களப்பு வாவியின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வாழைச்சேனை துறைமுக அபிவிருத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலையை இடமாற்றம் செய்தல் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விரிவுபடுத்தி மேம்படுத்துதல் ஆகிய விடயங்களின் முக்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை அதிகரிக்கும் திட்டங்கள் மற்றும் நெல் கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் தொடர்பாக கவணம் செலுத்தப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கண்ட திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என நிகழ்நிலையினுடாக கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன், கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

What’s your Reaction?

