பௌத்த மதத்துடன் கிடைத்த, நாகரீகமான சமூகத்தின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒரு நாகரீகமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் பலமாக ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
பொசன் பௌர்ணமி தினத்தில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி, பெருமைமிக்க ஒரு நாகரிகத்திற்கு பாதை அமைத்த உயரிய பௌத்த தர்மம் இந்நாட்டிற்கு கிடைத்தது இன்று போன்றதொரு பொசன் பௌர்ணமி தினத்திலேயாகும்.
தேரவாத பௌத்த தத்துவத்தினதும் பாரம்பரியத்தினதும் மையமாக எமது நாடு உருவான ஆரம்பமும் மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் இணைந்து வரலாற்றில் பதியப்பட்டது.
இது சமூக மாற்றத்துடன் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தக் காரணமான அந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத ரீதியான அர்த்தத்திற்கு அப்பால் சென்று, எமது நாட்டின் கலாசார, சமூக, அரசியல் ஆகிய ஒவ்வொரு துறையிலும் மேலும் முன்னேற்றமான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.
இதே போன்று, ஒரு தேசமாக எழுச்சி பெறுவதற்கான பலமான அடித்தளம் பௌத்த தத்துவத்துடன் எமக்குக் கிடைத்த அதேவேளை, கல்வியில் மாற்றத்தையும் ஏற்படுத்திய பௌத்த தர்மம், விகாரைகளையும் பிரிவெனாக்களையும் உருவாக்கி நாட்டு மக்களிடையே ஆன்மீக புரட்சியை ஏற்படுத்துவதுடன், அறிவை வழங்கும் சமூகப் பணியையும் நிறைவேற்றுவதில் பெரும் பங்களிப்பைச் செய்தது.
அது மாத்திரமன்றி கட்டிடக்கலை, சித்திரக் கலை, நீர்ப்பாசனம், வீடமைப்பு, சிற்பக் கலை போன்ற கலைப் படைப்புகளின் புதிய மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் எமது தேசத்தை பெருமைமிக்க தேசமாக உலகின் முன் உயர்த்தி நிறுத்தியது.
அத்தகைய பெருமைமிக்க, மேலான வரலாற்றின் இன்றைய பாரம்பரிய வாரிசுகளான நாம் அனைவருக்கும் இன்றைய தினத்தில் சுமத்தப்பட்டுள்ள தவிர்க்க முடியாத பொறுப்பாவது, இன்று சமூகத்தினுள் அழிந்து கொண்டிருக்கும் நற்பெறுமானங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் மீண்டும் மீட்டெடுத்து நாகரிகம் நிறைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதேயாகும்.
அதில், பாராளுமன்றம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் நாகரிகத்தைக் கொண்டுவருகின்ற இப் போராட்டத்தில் நாம் இன்னமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
நெறிமுறை இல்லாத நாடொன்று முன்னேற்றத்தை அடைய முடியாது. மஹிந்த தேரர் போதித்த சுல்லஹத்திபதோபம சூத்திரம் வலியுறுத்துவது, படிமுறையான பயிற்சியின் அவசியத்தையாகும்.
பௌத்த தர்மத்துடன் இந்நாட்டிற்குக் கிடைத்த அந்தப் பெருமைமிக்க நாகரிக சமூகத்தை மீண்டும் இலங்கை மண்ணில் மீள் நிலைநிறுத்துவதன் மூலம், நாட்டிற்குத் தேவையான ஒழுக்கவியல், சமூகவியல் மற்றும் சூழலியல் சார்ந்த புதிய மனப்பாங்குகளைக் கொண்ட நவீன நாகரிக தேசத்தை கட்டியெழுப்புவதற்காக மென்மேலும் உறுதி பூண்டு கைகோர்த்துக் கொள்வோம்.
உங்கள் அனைவருக்கும் கருணை, இரக்கம், ஞானம் ஆகியவற்றால் இதயங்களை ஒளிரச்செய்யும் புண்ணியமிக்க பொசன் தின வாழ்த்துகள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?

