காரைதீவு பிரதேச சபையின் அபிவிருத்திக்காக பல்வேறு சமய மற்றும் சமூக அமைப்புகள் காணிகளை வழங்கியுள்ளன. கலாசார மண்டபம் அமைந்துள்ள காணி உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தினால் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது, பொது நூலகம், வாகன தரிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுக்கான காணிகளும் அதேபோன்று வழங்கப்பட்டது. மேலும், தனியார் நபர்களும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு தங்களது காணிகளை பிரதேச சபை பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளனர். இப்போது பேசுபொருளாக மாறியுள்ள குறித்த காணிப்பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதனை அரசியல் அல்லது இன ரீதியான விவாதமாக மாற்றுவது பொருத்தமற்றது என காரைதீவு பிரதேச சபையின் காணி உரிமை தொடர்பான விவகாரம் குறித்து சபையில் உரையாற்றிய முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
இம்மாத சபை அமர்வு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
காரைதீவு பிரதேச சபை அமைந்துள்ள பகுதி முத்தமிழ் வித்தகர் உலகத் தமிழ் பேராசிரியர் பிறந்த மண்ணாகவும், விபுலானந்தர் சதுக்கத்திற்கு அண்மையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இருப்பதாக குறிப்பிட்டார். காணி உரிமை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்பட்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பு குறித்து சபையில் முடிவுகள் எடுப்பதும் கருத்துரைகள் வெளியிடுவதும் 1987 ஆம் ஆண்டு இலக்கம் 15 உள்ளூராட்சி சட்டங்களின் அடிப்படை நடைமுறைகளுக்கு முரணானதாக அமையக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து இப்பிரதேசத்தை முன்னேற்றும் நோக்கிலேயே கடந்த காலங்களில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய காணி விவகாரமும் இரு சமூகங்களுக்கும் இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் கையாளப்படக் கூடாது என்றார்.
குறித்த காணி தொடர்பான வழக்கு, பிரதேச சபை தங்களது காணியில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்நேரத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த சட்டத்தரணி நாராயணம் பிள்ளை வழக்கை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய ஒன்றாக இல்லாமல், இரு சமூகங்களும் கலந்துரையாடி தீர்வு காணக்கூடியதாக இருந்திருக்கலாம் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.
“இன்று ஒரு தரப்பு இது பள்ளிவாசல் காணி எனக் கூறுகிறது; மற்றொரு தரப்பு இது பிரதேச சபைக்குச் சொந்தமான காணி என வாதிடுகிறது. இதற்கான இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டியது தவிசாளர் அல்லது சபை அல்ல. நீதிமன்றமே அதனைத் தீர்மானிக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழர் – முஸ்லிம் உறவுகளை பாதிக்கும் வகையில் இனவாத அடிப்படையிலான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அவர், காரைதீவு பிரதேச சபை இரண்டு சமூகங்களின் நலன்களையும் சமமாகக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது என்றார்.
இரு இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் வாழ்வதே பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும் எனவும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தனது உரையில் குறிப்பிட்டார்
(நூருல் ஹுதா உமர்)

