சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் கொண்ட இலங்கை யுவதி ஒருவரை இலக்கு வைத்து இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆன்லைன் மோசடி சம்பவம் ஒன்று தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
முகநூல் வழியாக குறித்த யுவதிக்கு சீனாவைச் சேர்ந்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் நட்பு குறுகிய காலத்திலேயே காதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னை காதலிப்பதாக கூறிய அந்த இளைஞன், விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்காக சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பொருட்கள் அடங்கிய பெட்டியின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விசா, விமான டிக்கெட் நகல்கள் உள்ளிட்டவற்றையும் அவர் அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர், “பரிசுப் பொருட்கள் அடங்கிய பெட்டியை இலங்கையில் சுங்கத்தில் விடுவிக்க 5 இலட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்” எனவும், அந்த தொகையை தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறும் அவர் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசுப் பொருட்களின் மதிப்பு அதிகம் என்பதால், அந்தக் கோரிக்கையை நம்பிய யுவதியும் அவரது பெற்றோரும் தங்களிடம் இருந்த பணத்தையும், நகைகளை அடகு வைத்தும் சுமார் 5 இலட்சம் ரூபாயை குறித்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.
எனினும், பணம் அனுப்பப்பட்டதையடுத்து அந்த சீன இளைஞனின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதுடன், அவருடன் இருந்த அனைத்து தொடர்புகளும் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் தாம் மோசடிக்குள்ளாகியுள்ளதை உணர்ந்த யுவதி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

