திறைசேரியிலுருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமைக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் என நிதியமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மத்திய வங்கியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதிப் பற்றிய குழு நேற்று (08) பிற்பகல் கூடியது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் திறைசேரியினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு டிவி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘360’ நடப்பு அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

