உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள்..!

தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18, 2026 திங்கட்கிழமை பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களால் லண்டனில் நினைவுகூரப்பட்டது.

இந்நிகழ்வு பிற்பகல் 3.00 மணிக்கு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகி, இலக்கம் 10 பிரதமர் வாசஸ்தலத்தை நோக்கி கவனயீர்ப்பு பேரணியாக இடம்பெற்றது.

இந்நிகழ்வை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா (TCC-UK) மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வின் ஆரம்பமாக பிரித்தானிய தேசியக்கொடி, பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி கலையரசி மணியரசன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியை, முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்ற முன்னாள் போராளியும் கல்விப் பிரிவைச் சேர்ந்த லெப் கேணல் றாஜனுடன் பணியாற்றிய தீபன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

இரண்டு மாவீரர்களின் சகோதரரான செல்வன் அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அக வணக்கமும் மலர் வணக்கமும் நடைபெற்றது. மலர் வணக்கத்தை புனிதவதி சிவபாலன் சந்திரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் “நினைவுத் துளிகள்” எனும் தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உணர்வுபூர்வ நினைவுரைகள் வழங்கப்பட்டன. தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர் கார்த்திகா மற்றும் துணைப் பொறுப்பாளர் செல்வி கலையரசி மணியரசன் இணைந்து இதனை வழங்கினர்.

முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்ற முன்னாள் போராளி நிலவன் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு நியூட்டன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

நிகழ்வின் நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் ஒலிவடிவில் ஒலிக்கப்படுவதுடன், தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது.

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை