ஜனநாயகப் போராளிகள் கட்சி என்.நகுலேஸ்
ஈழ விடுதலைப் போராட்டத்தில் நாம் ஆயுதம் கொண்டு போராடுகையின் தன் குரலை ஆயுதமாகக் கொண்டு போராடியவர் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா. இவரின் இழப்பு தமிழ்த் தேசியத்தின் பேரிழப்பாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.
தேனிசை செல்லப்பாவின் மறைவையொட்டி நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற புகழ் வணக்க நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தன் குரலால் எம் இனத்தின் விடிவிற்காய் ஆதரவு தந்த மகான் இன்று எம்மை விட்டுப் பிரிந்தார். தேனிசை செல்லப்பா என்ற பெயர் தமிழ்த் தேசியம் இருக்கும் வரை ஓயாது, அவர் எம்மை விட்டுப் பிரிந்திருக்கலாம் ஆனால் அவர் பாடிய பாடலும் அவரின் குரலும் என்றும் தமிழ் மக்களை விட்டு அகலாது.
தேனிசை செல்லப்பா இந்தியா தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், தமிழ்த் தேசியத்திலும், தமிழ்த் தேசியப் போராட்டத்திலும் ஈர்ப்புற்று தன் குரல் தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியப் போராட்டத்திற்காகவும் உதவ வேண்டும் என்ற நோக்கோடு கவிஞர் காசியானந்தனின் உயரிய வரிகளிலான பாடல்களைத் தந்தவர்.
இன்றும் அப்பாடல்களைக் கேட்கும் போது ஒரு போராளியாக எம்மை மயிர்கூச்செரியச் செய்யும். அந்தளவிலாக மக்கள் மனதையும் போராட்ட வீரங்களின் வீரியத்தையும் எழுச்சியூட்டுபவையாக இருக்கும் அவரது பாடல்கள். தேசியத் தலைவரால் பாசறைப் பாணர் என்ற அற்புதப் பெயர்சூட்டி அழகு பார்க்கப்பட்டவர்.
தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு இந்தியா தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுகளின் ஆதரவு அர்ப்பணிப்பு என்றும் மறக்க முடியாதவை. அந்த வரிசையில் பாசறைப் பாணரும் முதல்நிலையில் இருப்பார். தமித் தேசிய விடுதலைக்கு ஒரு தமிழனாக தனது ஆதரவும் இருக்க வேண்டும் என தனக்கு சினிமாத்துறையில் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் விடுத்து என் குரல் தேச விடுதலைக்கனதாக மாத்திரமே இருக்கும் என்ற உயரிய சிந்தனையில் வாழ்ந்தவர். இவ்வாறான உத்தமர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றும் வீண்போகக் கூடாது.
தமிழ் மக்கள் ஒருமித்து தமிழ்த் தேசியத்திற்காக நிற்பதே நாம் இவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன் என்று தெரிவித்தார்.
நிருபர்
சுமன்
What’s your Reaction?
1
