இலங்கை மின்சார சபையை சட்டப்பூர்வமாகக் கலைத்து, அதனைப் புதிய நிறுவனங்களாக மறுசீரமைப்பதற்கான ‘நிர்ணயிக்கப்பட்ட திகதியை’ அறிவிப்பதில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பரிந்துரைக்கமைய நியமிக்கப்பட்ட குழு, தேசிய மின்சாரக் கொள்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை பிற்போடப்படுவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகத் தெரியவருகிறது.
இதன் விளைவாக, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிப்ரவரி 14-ஆம் திகதிக்குள் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2025-ஆம் ஆண்டின் 14-ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த வரைவு மின்சாரக் கொள்கை, கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட போதிலும், அதற்கு இன்னும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை.
பேராசிரியர் மோகன் முனசிங்க தலைமையிலான நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்த வரைவு, இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக பொதுமக்களின் கருத்துக்களுக்காக முன்வைக்கப்பட வேண்டியுள்ளது.
இக்கொள்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே மறுசீரமைப்புக்கான உத்தயோகப்பூர்வ திகதி அறிவிக்கப்படும் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உறுதிப்படுத்தியுள்ளார்.
மறுபுறம், மின்சார சபையின் மறுசீரமைப்புத் தாமதத்தினால் தன்னிச்சையான ஓய்வூதியத் திட்டத்திற்கு ( விண்ணப்பித்த சுமார் 2,200 ஊழியர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அரசாங்கத்தின் உறுதிமொழியை நம்பி ஓய்வுபெற விண்ணப்பித்த தங்களால், மறுசீரமைப்புத் திகதி அறிவிக்கப்படாத காரணத்தினால் சேவையிலிருந்து விலகவோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்கவோ முடியாமல் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாமதத்தினால் தங்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் ஊழியர்கள், மறுசீரமைப்புப் பணிகள் முடியும் வரை தமக்குச் சம்பளமில்லாத விடுமுறையையாவது வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான நஷ்டஈட்டுத் தொகையை மின் கட்டண அதிகரிப்பின் ஊடாக நுகர்வோர் மீது சுமத்த மின்சார சபை திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
