ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கவும், தமிழினப் படுகொலைக்கான சர்வதேசப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கடிதம் எழுதிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வல்வெட்டித்துறை நகர சபை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஈழத் தமிழ் மக்களின் இறையாண்மையை மீண்டும் நிலைநாட்ட அமெரிக்கா தலைமைத்துவப் பாத்திரத்தை ஏற்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் வல்வெட்டித்துறை மண்ணிலிருந்தும், ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்கள் சார்பாகவும் இந்த நன்றியினை அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்கச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழினப் படுகொலை குறித்து சர்வதேச மேற்பார்வையிலான விசாரணை, நீதி மற்றும் பொது வாக்கெடுப்பு மூலம் நிரந்தர அரசியல் தீர்வு ஆகியவற்றை வலியுறுத்தியிருந்தனர்.
இச்செயற்பாடு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளதாக தமிழ் கார்டியன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று வட மாகாண சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இக்கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு ஒன்றே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே ஜனநாயக வழிமுறை என்றும், வரலாற்று ரீதியாகத் திணிக்கப்பட்ட தீர்வுகளைத் தமிழ் மக்கள் நிராகரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் ஈழத் தமிழ் இனம் முழுமையான நீதியைப் பெற தகுதியுடையது என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தலையீடானது தமிழ் மக்களின் இறையாண்மையை மீட்பதற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என வல்வெட்டித்துறை நகர சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
