கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக,; 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீட்டை வழங்க சி.எச்.ஈ.சி போர்ட் சிற்றி (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது
புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த முதலீட்டு உறுதி, இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஒழுங்குமுறைச் செயல்முறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் மிகப்பெரிய நகர அபிவிருத்தித் திட்டமான கொழும்பு துறைமுக நகரத்தின் இரண்டாம் கட்ட பணிகளை முன்னெடுக்க இந்த முதலீடு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முதலீடு, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் திட்டத்தின் நீண்டகால வெற்றியில் தங்களுக்குள்ள உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக சி.எச்.ஈ.சி போர்ட் சிற்றி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குநர் சியோங் ஹொங்ஃபெங், இந்த 300 மில்லியன் டொலர் முதலீடு இலங்கையுடன் தங்களுக்குள்ள நீண்டகால உறுதியின் தெளிவான சான்றாகும் என்றும், கொழும்பு துறைமுக நகரத்தை குறுகிய காலத் திட்டமாக அல்ல, எதிர்கால தலைமுறைகளுக்கான திட்டமாகவே அணுகுவதாகவும் கூறினார்.
இந்த இரண்டாம் கட்ட முதலீட்டின் மூலம், இலங்கையின் முதல் பல்சேவை விசேட பொருளாதார மண்டலமான கொழும்பு துறைமுக நகரத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படவுள்ளன.
இதன் ஊடாக முதலீடுகளை ஈர்க்கவும், புதிய தொழில்முயற்சிகளை உருவாக்கவும், கட்டுமானம், சேவை உள்ளிட்ட துறைகளில் தொடர்ச்சியான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சி.எச்.ஈ.சி போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனம் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை தங்களது முதலீட்டைத் தொடரும் எனவும், இது இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு நீண்டகால பங்களிப்பாக அமையும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
