ஆறாம் வகுப்பு பாடப்பிரிவுகள் தொடர்பான கல்வி மாற்றங்கள் உலக வங்கியின் 200 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான நிபந்தனையாக அவசரமாக கொண்டு வரப்பட்டன என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் முற்றாக மறுத்துள்ளார்.
கல்வி அமைச்சின் புதிய கல்வி மாற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விளக்கம் அளித்துள்ளார்.
மாணவர்களின் இணைய பயன்பாடுகளை சரியான பாதையில் வழிநடத்துவதற்காக டிஜிட்டல் பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து முழுமையாக விலக்க முடியாது என்பதால், மாணவர்களுக்கு ஏற்ற இணையவழி செயல்பாடுகள் மட்டும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கான வழிகாட்டுதல்கள் நடப்பு ஆண்டின் நடுப்பகுதிக்குள் வழங்கப்படும் என்றும், கல்வி அமைச்சால் அனுமதிக்கப்பட்ட இணையதளங்கள் மற்றும் இணைப்புகளுக்கு மட்டுமே மாணவர்கள் வழிநடத்தப்படுவர் என்றும் கூறினார்.
இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கல்வி மாற்றங்களின் கீழ் சுயக் கற்றல் அடிப்படையிலான பாடப்பிரிவுகள் ஊக்குவிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
வருட இறுதி தேர்வுகளுக்கு பதிலாக தொடர்ச்சியான மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
நாட்டில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை இந்த கல்வி மாற்றங்களுக்கு தடையாக இருக்கும் என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரதமர், 2026 மார்ச் மாதத்துக்குள் ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்காக அரசாங்கம் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், மாவட்ட ஆளுநர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆறாம் வகுப்பு பாடப்பிரிவுகள் தொடர்பான கல்வி மாற்றங்கள் உலக வங்கியின் 200 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான நிபந்தனையாக அவசரமாக கொண்டு வரப்பட்டன என்ற குற்றச்சாட்டுகளை அவர் முற்றாக மறுத்தார்.
அத்தகைய எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
