வெனிசுவேலாவின் தலைநகர் கராகாஸில் இன்று அதிகாலை விமானங்களின் சத்தமும் பலத்த வெடிப்பு ஒலிகளும் கேட்கப்பட்டதுடன், நகரின் சில பகுதிகளில் புகை மேகம் எழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய இராணுவத் தளத்திற்கு அருகிலுள்ள தென் கராகாஸ் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்களின் துல்லியமான காரணமும், இடம்பெற்ற இடங்களும் உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சமூக வலைத்தளங்களில் கராகாஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் இடம்பெற்றதாகக் கூறும் காணொளிகள் பரவி வருகின்றன.
எனினும், அவற்றை ராய்ட்டர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெனிசுவேலாவில் நிலப்பரப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என முன்பே எச்சரித்திருந்தார்.
ஜனாதிபதி நிக்கோலஸ் மதூரோ பதவியிலிருந்து விலகுவது ‘புத்திசாலித்தனமானது’ எனவும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கரீபியன் கடற்பகுதியில் விமானத் தாங்கிக் கப்பல் உள்ளிட்ட பெரும் இராணுவக் குவிப்பை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும், வெனிசுவேலா எண்ணெய் மீது தடைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கப்பல்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம், போதைப்பொருள் ஏற்றப்படுகின்றதாகக் கூறப்படும் வெனிசுவேலாவின் ஒரு பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இதேவேளை, இந்த குற்றச்சாட்டுகளை வெனிசுவேலா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

