வடக்கு மாகாணத்திற்கு ரஷ்ய சுற்றுலாதுறை பயணிகள் வருகை தருவது மிகவும் குறைவாக இருப்பதாக இருப்பதாக ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் வடக்கு மாகாண ஆளுநரிடம் கவலை வெளியிட்டுள்ளார்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன், ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுடன் இன்று அவரது செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
பல தசாப்தங்களுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட ரஷ்யத் தூதுவரை ஆளுநர் வரவேற்றார்.
இச்சந்திப்பில் ரஷ்யத் தூதுவர், இலங்கைக்கு அதிகளவில் ரஷ்யச் சுற்றுலா பயணிகள் வருவதாக, ஆனால் வடக்கு மாகாணத்திற்கு வருகை தருவது மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிட்டு, வடக்கு மாகாணத்திற்கு ரஷ்ய சுற்றுலாதுறை ஈர்க்கும் வகையில் சுற்றுலா திட்டங்களை முன்னெடுப்பது சிறப்பாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ஆளுநர், இந்தியாவுடனான நேரடி விமான சேவை காரணமாக அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்திற்கு வருவதாகவும், மாகாணம் சுற்றுலா பயணிகள் தங்கச் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான சூழலை வழங்குவதாகவும் கூறி, ரஷ்ய மக்களுக்கு இதை அறிமுகப்படுத்தி வருகையை அதிகரிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக ரஷ்ய முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பில் ரஷ்ய கலாசார நிலையம் ஊடாக வழங்கப்படும் புலமைப்பரிசு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை வடக்கு மாகாண மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தூதுவர் அறிவுறுத்தினார்.
இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

