இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு பிரித்தானிய அரசு முக்கிய வர்த்தக சலுகையை வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசு அறிவித்துள்ள தளர்த்தப்பட்ட வர்த்தக விதிகளின் கீழ், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் உலகின் எந்த நாட்டிலிருந்தும் நூறு சதவீத மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், முன்னர் நடைமுறையில் இருந்த பிராந்திய மூலப்பொருள் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகளின் கீழ், இலங்கை ஆடை உற்பத்திகளுக்கு பிரித்தானிய சந்தையில் சுங்க வரியில்லா அணுகல் தொடர்ந்தும் வழங்கப்படுவதால், இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு பெரும் நன்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி சந்தையாக பிரித்தானியா காணப்படுவதுடன், அந்த நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி பெறுமதி சுமார் 675 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
