இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், செல்வாக்கு மிகுந்த சமூகத்தினரும், உயர்ந்த வருமானம் கொண்டவர்களும் இதில் அதிகமாக ஈடுபடத் தொடங்கியிருப்பது கவலைக்குரியதாகியுள்ளது.
தொழில்முறை நிபுணர்கள், வசதியான இளைஞர்கள் மற்றும் உயர்சமூகத்தைச் சேர்ந்த ஆண், பெண்களிடையே போதைப்பொருள் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளதாக காவல்துறையும் தரவுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
2025 ஜனவரி முதல் 2026 ஜனவரி ஆரம்பம் வரை, ஹெரோயின், ‘ஐஸ்’ எனப்படும் மெத்தாம்பெட்டமின், கஞ்சா, கோகெயின் மற்றும் இலட்சக்கணக்கான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இருப்பினும், கைப்பற்றப்பட்ட அளவுகள் மட்டும் உண்மையான பயன்பாட்டு போக்கை முழுமையாக வெளிப்படுத்தாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை கைது புள்ளிவிபரங்களில் குறைவாக இடம்பெற்றிருந்த செல்வந்தர்கள், தற்போது போதைப்பொருள் வட்டாரங்களில் அதிகமாகக் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
2024 செப்டம்பரில் பதவியேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், போதைப்பொருள் ஒழிப்பை தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகக் கொள்கைகளின் முக்கிய அம்சமாக முன்னெடுத்து வருகிறது.
போதைப்பொருள் பிரச்சினையை தேசிய பேரழிவாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, விரிவான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் மட்டும் 2025ஆம் ஆண்டில் போதைப்பொருள் அடிமைத்தனம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முழு நாடும் ஒன்றாக என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய மத்திய மாகாணத்தின் மூத்த துணை காவல்துறை மா அதிபர் லலித் பதிநாயக்க, கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பரவலும் பயன்பாடும் கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறினார்.
உயர்சமூகப் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் போதைப்பொருள் அடிமையாகி வருவது மிகக் கவலைக்குரிய போக்காக இருப்பதாக அவர் எச்சரித்தார்.
2024 உடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் கண்டி பிரிவில் ஹெரோயின் கைப்பற்றல் 1.2 கிலோகிராமால், ‘ஐஸ்’ கைப்பற்றல் 3 கிலோ 23 கிராமால் அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக போதைப்பொருள் பயன்பாடு ஐமடங்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிறைகள் கடுமையான குற்றவாளிகளை உருவாக்கும் இடங்களாக மாறி வருவதாகக் கூறிய அவர், சிறிய அளவு போதைப்பொருள் குற்றத்திற்காக சிறைக்குச் சென்றவர்களும், பின்னர் பெரிய குற்றவாளிகளாக சமூகத்துக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் வர்த்தகம் எளிய பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்குகள் மூலம் நடைபெறுவதாகவும், சில சமயங்களில் பிச்சைக்காரர்கள் அல்லது உயிரிழந்தவர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி கணக்குகள் திறக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் மத்திய வங்கியின் நிதிக் குற்றப் பிரிவிற்கு அறிவிக்கப்பட வேண்டியிருந்தாலும், விசாரணைகள் தாமதமாக நடைபெறுவதால் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவது கடினமாகி வருவதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற முறைகளில் கைபேசி சிம் அட்டைகளும் பெறப்படுவதாகவும், தேசிய அடையாள அட்டை சரிபார்ப்பு விதிமுறைகள் பல இடங்களில் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு கற்பனைக்கே எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், நாடு போதைப்பொருள் கடத்தலுக்கான இடைநிலைய மையமாக மாறி வருவதாகவும் குறிப்பிட்ட லலித் பதிநாயக்க, போதைப்பொருள் ஒழிப்பு காவல்துறையால் மட்டுமே சாத்தியமில்லை என்றும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

